உயர் தரப்பரீட்சையில் தோற்றும் எனக்கு, கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் குறித்த முறைப்பாடு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் முன்பாக உள்ள இந்து ஆலயம் ஒன்றிலிருந்து அதிக ஒலி எழுப்பப்படுவதாகவும், இதனால் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தன்னால் அதற்கான மீட்டல் கல்வியை தொடர முடியாதுள்ளதாக குறித்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
காலை 5.30 மணியிலிருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை அதிக ஒலி எழுப்பப்படுவதாகவும், இதனால் தமது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் குறித்த மாணவியின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த 27ம் திகதி குறித்த விடயம் தொடர்பில் மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். குறித்த கிளிநொச்சியில் இயங்கி வரும் கருணா நிலைய நிர்வாகியினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருணா நிலையத்தில் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் சிறுவர் இல்லத்தில் தங்கி நின்று கல்வி தொடரும் மாணவிகள் பலர் உள்ளதுடன், பல்வேறு நோய்களுடன் முதியவர்களும் பராமரிக்கப்பட்டு வரும் அதேவேளை, குறித்த நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்திலிருந்து எழுப்பப்படும் அதிக ஒலி காரணமாக மேற்குறித்தவாறு மாணவர்கள், மற்றும் பல்வேறு பட்ட நிலையில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்ற போதிலும், ஒலியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் நலன் கருதியும் முதியவர்கள், பல்வேறு நோய்த்தாக்கங்களிற்கு ஆளானவர்களின் நிலை கருதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment